நேற்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவான நிலையில், மீண்டும் இன்று வீழ்ச்சி பாதையில் பங்குச்சந்தை நகர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 501.73 புள்ளிகள் சரிந்து, 58909.35 ஆக நிலை பெற்றது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 129 புள்ளிகள் சரிந்து, 17321.9 ஆக நிலை பெற்றது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசாக்கள் குறைந்து 82.6 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, மாருதி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை கடும் சரிவை சந்தித்தன. கிட்டத்தட்ட 3% சரிவை ஒவ்வொன்றும் பதிவு செய்தன. இவை தவிர, டெக் மகேந்திரா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இழப்புகளை சந்தித்துள்ளன. அதே வேளையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் உயர்வைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர் ஆகியவை கிட்டத்தட்ட 5% உயர்வை பதிவு செய்துள்ளன. மொத்தத்தில், அதானி குழுமம் 2% உயர்வை பதிவு செய்துள்ளது. இது தவிர, சன் பார்மா, பவர் கிரிட், எச் சி எல் டெக், எல் அண்ட் டி நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்துள்ளன.