பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவை தற்போது சரிவை கண்டுள்ளது.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' மாதம்தோறும் வெளியிடுகிறது. தற்போது, ஜூலை மாதத்திற்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதில் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை 98.51 லட்சமாக இருந்தது. இது ஜூலை மாதம் 96.11 லட்சமாக குறைந்து உள்ளது. இதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 2.4 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையில் இருந்து வெளியேறி உள்ளனர்.
தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, புதுடில்லி, உத்தரபிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிந்துள்ளது. நாடு முழுதும் 8.19 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். பி.எஸ்.என்.எல்., 'பிராட்பேண்ட்' சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.52 கோடியாக உள்ளதாக 'டிராய்' தெரிவித்துள்ளது.