வெளிநாட்டு சுற்றுலா பயண கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுவதாக நேற்றைய பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான வருமான வரிச் சட்டத்தின் 206 சி பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் என்ற பெயரில், வெளிநாட்டுக்கு சுற்றுலா மேற்கொள்பவர்களின் கட்டணத்தில் 5% பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு இந்த தொகையை வசூலித்து செலுத்தி வந்தன. தற்போது, இந்த வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் தொகை, 7 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால், அதற்கான டிசிஎஸ் வரி 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய வரி விகித மாற்றம் செயல்பாட்டுக்கு வரும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.