தமிழகத்தில் வணிகவரித் துறை வருவாய் கடந்த ஆண்டின் மொத்த வருவாயைக் கடந்து ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் பதிவுத் துறை மற்றும் வணிகவரித் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் கடந்த ஜன. 24-ம் தேதி வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, "வணிகவரித் துறையைப் பொறுத்தவரை ரூ.1,04,059 கோடி, பதிவுத் துறையில் ரூ.13,631 கோடி என மொத்தம் ரூ.1,17,690 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல, பதிவுத் துறையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் வருவாய் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜனவரி மாத முடிவில் பதிவுத் துறை வருவாய் ரூ.14 ஆயிரம் கோடியைத் தாண்டி ரூ.14,043 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் மொத்த வருவாயான ரூ.13,914 கோடியை விட அதிகமாகும். அதேபோல வணிகவரித் துறையின் வருவாயும் கடந்த ஆண்டு மொத்தவருவாயைத் தாண்டி பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.