கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டத்தில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களிடம் ஏஜென்சிகள் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பிய சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதை அடுத்து இந்திய மாணவர்கள் 700 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா அரசு உத்தரவிட்டது.. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்நிலையில் மாணவர் விசாவில் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து நிறுவனங்களும் விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும்,குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும், அமைச்சகத்திடம் இருந்து சரிபார்க்கப்பட்ட சான்றிதழ் பெற்ற பிறகு மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த புதிய கொள்கை வரும் டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறியதாவது, கனடாவுக்கு படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை. அதே சமயம் மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே இந்த புதிய விதிமுறையின் நோக்கம் என்றார். இந்த முறை மாணவர்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்புக்கான அனுமதி வழங்கப்படும். இதனை கனடா அரசு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.