இந்தியாவின் பொதுத்துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி, வியாழன் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருடாந்திர லாபம் 89% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 2525 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அத்துடன், வருடாந்திர அடிப்படையில், வங்கியின் மொத்த வருவாய் 57 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், வட்டி அல்லாத மொத்த வருவாய் 4825 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கியின் நிகர வட்டி விளிம்பு 9 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து, 2.86% ஆக உள்ளது. வட்டி மூலமான வருடாந்திர நிகர வருவாய் 19% உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, வட்டி மூலமான வருவாய் 7434 கோடி ரூபாய் ஆகும். மேலும், சர்வதேச அளவில் 20 சதவீதமும், உள்நாட்டு அளவில் 18 சதவீதமும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. சர்வதேச அளவில் வருடாந்திர வளர்ச்சி 8.3 கோடியாகவும், உள்நாட்டு வளர்ச்சி 7.8 கோடியாகவும் பதிவாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மூலம் உள்நாட்டு வளர்ச்சி 25% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சில்லறை வர்த்தகம், வேளாண்துறை போன்றவை வங்கியின் கடன்கள் மூலம் 16% வளர்ச்சி அடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
வங்கியின் வாராக்கடன் விகிதம் 6.37% ஆக உள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 205 அடிப்படை புள்ளிகள் குறைவாகும். அத்துடன், நடப்பு நிதி ஆண்டில், 5500 கோடி ரூபாய் நிதியை பாண்டு விற்பனை மூலம் திரட்ட கனரா வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு காலாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாண்டு விற்பனை மூலம் 4000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கியின் லாபம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.