சென்னையிலுள்ள மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலப்பட்டா ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஈ.சி.ஆரில் அமைந்துள்ள மாயாஜாலில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 ஏக்கர் அளவிலான அரசுக்கு சொந்தமான இடம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 2 ஏக்கர் இடத்திற்கு பட்டா கேட்டு செங்கல்பட்டு தாசில்தாரரிடம் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. விண்ணப்பம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரண்டு ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தற்போது நீதிபதிகள் டி.ராஜா மற்றும் குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், குறிப்பிட்ட நிலம் தொடர்பான பல உண்மை தகவல்களை தனி நீதிபதி முன்பு மறைத்து பட்டா பெற்றுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.