தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, ‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் முன்பாக, மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக் கூடாது,’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, இதே நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், மின் கட்டணத்தை உயர்த்தும் அரசின் உத்தரவு செல்லும் என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘ஆணையங்களுக்கு சட்டத்துறை அதிகாரிகளை நியமிக்கும்படி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்ததே, அது அமல்படுத்தப்படவில்லையா?’ என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு தரப்பில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரியை 3 மாதத்துக்குள் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நீதிபதிகள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரிகளை மூன்று மாதத்துக்குள் நியமிக்க வேண்டும். அதில், ஏதேனும் பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில் மனுதாரர் நீதிமன்றத்திற்கு வந்து முறையிடலாம். தமிழக அரசின் மின்கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.