தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது என்று சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றபட்டுள்ளது.
2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி தமிழக அரசு நிரந்தரப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.