பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களிடம் ஒரு லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கடுமையான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதில் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லை எனில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பறக்கும் படையினர் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களுடன் ஒரு லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம் எனவும் அவருடன் இருக்கும் வேட்பாளர்கள் 50,000 வரை வைத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வைத்திருந்தால் அப்பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவை தவிர வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் சிறிய மாநிலங்களில் வேட்பாளர்கள் 75 லட்சம் வரை செலவு செய்யலாம் எனவும், பெரிய மாநிலங்களில் 95 லட்சம் வரை செலவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.