விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் குறைந்த, விலையில் அரிசி விற்பனையை மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் அரிசி விற்கப்படுவது குறித்து மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “உள்நாட்டு அரிசி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அரிசி விலை 15% அளவில் உயர்ந்துள்ளது. எனவே, ‘பாரத் அரிசி’ என்ற பெயரில், மானிய விலையில் அரிசி விற்பனை தொடங்கப்படுகிறது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் ஆகியவற்றில் பாரத் அரிசி விற்கப்படும். முதற்கட்டமாக, 5 லட்சம் டன் அரிசி, பாரத் அரிசி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் அரிசி விற்பனை செய்யப்படும்.” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.