தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளங்களுக்கு ஒன்றிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், வலுவான இணைப்புகளை வழங்குவதற்கு பிரதமர் உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மிதவை இறங்கு தளங்களை அமைப்பது, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன் நீர் தொடர்பான சுற்றுலாவுக்கு புதிய வழிகளையும் உருவாக்கும் என்றார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக 4 மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. மேலும் கடலூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இந்த இறங்கு தளங்கள் அமைய உள்ளது.














