சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக, சபரிமலையில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,570 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமையவுள்ளது. ரூ.3,411 கோடி செலவில் விமான நிலையம் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு துறையும் விமான போக்குவரத்துத் துறையும் ஏற்கெனவே முதல்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது. இந்நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (இஏசி) அனுமதி வழங்கியுள்ளது.