இந்திய மத்திய அரசு, அரசு அதிகாரிகள் அலுவலக கணினிகளில் சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. தகவல் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் டீப்சீக் செயலி அமெரிக்காவின் சாட்ஜிபிடியைவிட அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இதற்கு தடைவிதித்துள்ளன. டீப்சீக்கில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்தியாவில் இதனை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் க்வா ஜியாகுன், "சீன அரசு எந்த நிறுவனத்தையும் சட்டத்திற்கு எதிராக தகவல்களை சேகரிக்கச் சொல்லவில்லை. இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு வணிகத்தை அரசியலாக்கும் செயல். சீன நிறுவனங்களின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.