சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1,907 ஏக்கரில் அமைந்துள்ள செட்டிநாடு அரசு கால்நடை பண்ணையில், 1944-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்ட இரண்டு விமான ஓடுதளங்கள் உள்ளன. தற்போது அவை சேதமடையாமல் உள்ளதால், விமான நிலையம் அமைக்க ஏற்ற இடமாக கருதப்படுகிறது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தொழிலதிபர்கள், மாணவர்கள், வேலைவாய்ப்பு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்கின்றனர். மேலும், செட்டிநாடு பாணி கலைப்பொருட்கள், ஆத்தங்குடி டைல்ஸ், செட்டிநாடு கண்டாங்கி சேலைகள் உள்ளிட்டவை உலகப் புகழ்பெற்றதால், வெளிநாட்டு வணிகர்களும் இங்கு வருகின்றனர். திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளும் அடிக்கடி நடப்பதால், திரைத்துறையினரும் பயணம் செய்கின்றனர். தற்போது, அவர்கள் மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களை பயன்படுத்திவருகின்றனர். இதனால், காரைக்குடியில் விமான சேவை ஒரு முக்கிய தேவையாக இருந்தது.
2018-ல் இந்திய விமான சேவைக் கழக அதிகாரிகள் ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். பின்னர், விமானிகள் பயிற்சி மையம் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்தும், திட்டம் முன்னேறவில்லை. தற்போது மத்திய பட்ஜெட்டில் விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.