டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கத்திற்கு 14903 கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2022 ஆம் நிதியாண்டு முதல் 2026 ஆம் நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கம் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை 14903 கோடி ஆக சொல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 2339 கிலோமீட்டர் தொலைவிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவா அறிவித்துள்ளார். இதன் மூலம், ரயில்களில் கூட்ட நெரிசல் பன்மடங்கு குறையும் என தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 7 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 32500 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம், பிரதம மந்திரி இ - பஸ் சேவா திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.