கடந்த வெள்ளிக்கிழமை சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது, பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் தொலைவு, வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தொலைவை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதல் கட்ட முயற்சியில், சந்திரயான் 3 விண்கலத்தின் தொலைவு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, குறைந்தபட்சம் 173 கிலோமீட்டர் மற்றும் அதிகபட்சம் 41762 கிலோமீட்டர் தொலைவில், பூமியை சுற்றி சந்திரயான் 3 விண்கலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த 2 வாரங்களுக்கு, படிப்படியாக விண்கலத்தின் தொலைவை அதிகரிக்கும் பணிகள் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இறுதியாக, ஆகஸ்ட் 1 ம் தேதி, நிலவின் ஈர்ப்பு விசையில், நிலவின் சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்படும். அதன் பிறகு, ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 5:47 மணியளவில், சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடி, சந்திரயான் 3 வெற்றிகரமாக இயங்கி வருவதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.