சென்னை ஐஐடி, சென்னையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு குறித்த ஆய்வை நடத்தியது. அதில், 2019 முதல் 2040 வரையிலான காலகட்டத்தில், சென்னையில் உள்ள கட்டுமானங்கள் 23.2 கோடி டன் அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் என தெரியவந்துள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவில் 25% கட்டிடங்கள், கட்டுமானங்கள் போன்றவற்றில் மூலம் ஏற்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கட்டுமானங்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டு சேர்க்கும் போக்குவரத்து அமைப்புகள், கட்டுமானங்களுக்கான மின்சார பயன்பாடு, கட்டுமானங்களின் போது இயக்கப்படும் சாதனங்கள், ஆகியவற்றின் மூலம் அதிக அளவிலான கரியமில வாயு வெளியாவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கட்டுமானப் பணிகளுக்கு, கரியமில வாயுவை வெளியிடாத, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை பயன்படுத்த இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், கரியமில வாயு வெளியேற்றம் 11.5 கோடி டன் அளவில் குறையும் எனவும் தெரிவித்துள்ளது.