தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் செஸ் அமைப்பின் ஏற்பாட்டில், சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை கோட்டூர்புரம் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நவம்பர் 5 முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம் ஆகும். இந்த போட்டியில், மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனின் உட்பட 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தின் கார்த்திகேயன் முரளி, பிரணவ், பிரனேஷ், ஆர். வைஷாலி மற்றும் ஹரிகா உட்பட 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் போட்டியிடுகின்றனர். இந்தப் போட்டி 7 சுற்றுகளாக கிளாசிக்கல் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறுகிறது.