சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன முனையம் ஜனவரி 15ல் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி 2018 செப்டம்பரில் துவங்கியது. மொத்தம் ஐந்து தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன. இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், புதிய விமான முனையம் திறப்பது குறித்து அவ்வபோது கூட்டங்கள் நடந்து வருகின்றன. முனையத்தை திறக்க தேவையான அனுமதியும் பெறப்பட்டு வருகிறது.
முனைய கட்டுமான பணிகள் 95 சதவீதம் தான் முடிந்துள்ளன. இறுதி கட்ட பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, முனையம் ஜனவரி 15ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் விமான நிறுவனங்கள் தங்களுக்கான அலுவலகங்களை தேர்வு செய்து அவற்றுக்கு மாறுவதற்கான பணிகளையும் துவங்கி உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.