சென்னை மாநகராட்சி பட்ஜெட் 27-ந்தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஒருமாதமாக தயார் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டம் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வரி விதிப்பு மற்றும் நிதிநிலைக் குழு தலைவர் சர்பஜெய தஸ் நரேந்திரன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து மேலும் பல அறிவிப்புகள் அது தொடர்பாக இடம்பெறலாம். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மேயர் 67 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.