தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் அலுவலரின் பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலிப் பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது காலியாகவுள்ள 22 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முதலமைச்சர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.