திருச்சி வேளாண் கண்காட்சியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 நாள் வேளாண் சங்கமம் - 2023 நிகழ்ச்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இங்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. அதன் பின்னர் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கினார்.
இந்த வேளாண் கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், பசுமை குடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன எந்திரங்கள், டிரோன்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த கண்காட்சியில் உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவுகள், மண் வள அட்டை வழங்கும் சேவைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கருத்தரங்கில் 3 நாட்களும் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.