திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு செல்கிறார்.
கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார். முதல் கட்டமாக கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களின் கள ஆய்வுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு 5-ந் தேதி செல்கிறார். இந்த 5 மாவட்டங்களுக்கான கள ஆய்வை அடுத்த மாதம் (மார்ச்) 5 மற்றும் 6-ந் தேதிகளில் மதுரையில் இருந்தபடி அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.