தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்துப் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று சந்தித்தார். அப்போது இரு நாட்டு வர்த்தகம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேசினர்.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுத் துறைச் செயலர் டி.ஜகந்நாதன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக துணைத் தூதர் எட்கர் பாங்க் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து முதல் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புத் துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழகத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.