வருவாய் துறையில் நிலுவையிலுள்ள சான்றிதழ்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் முதலமைச்சரின் தகவல் பலகை (Dash board) தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நிலுவையிலுள்ள சான்றிதழ்களை அடுத்த ஒருமாத காலத்திற்குள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விவரங்கள் குறித்து தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.