நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் இன்று புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், அதற்கான பதவியேற்பு விழாக்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக இடையேயான கூட்டணி மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் இல. கணேசன், ரியோவுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. கான்ராட் சங்மா இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் இவது கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. கான்ராட் சங்மாவோடு இன்று 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.














