அமெரிக்காவை சேர்ந்த சாப்பியன் எனும் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர். ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு இந்த நேரத்தில் நிறைய நேரம் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டு இருப்பார்கள். இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இயல்பாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. ஆகவே குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலையில் ஈடுபடாமல், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.