தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தியது.
சீனாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகுவதாகவும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதனை பாரபட்சமான நடவடிக்கை என சீனா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததற்கு பதிலடியாக தென்கொரிய மக்களுக்கு சுற்றுலா மற்றும் வணிக விசா வழங்குவதை நிறுத்துவதாக சீனா நேற்றுமுன்தினம் அறிவித்தது. சீன பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என சீனா கூறியது. இந்த நிலையில் தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பான் மக்களுக்கு சீனா விசா தடை விதித்துள்ளது. மேலும் பல நாடுகளுக்கு சீனா இந்த தடையை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.