சீனாவின் சென்சோ மாகாணத்தில், கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கு உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை அமைந்துள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகளை எதிர்த்து ஊழியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறையினரின் தடுப்புகளை மீறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறையினர் தடியடி நிகழ்த்தி போராட்டக்காரர்களை கலைக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதில், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம், போராட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.