எரிவாயு எடுப்பதற்காக பூமியில் மற்றொரு ஆழமான பள்ளத்தை சீனா தோண்டி வருகிறது. கிட்டத்தட்ட 10,000 மீட்டர் ஆழத்திற்கு இந்த பள்ளம் தோண்டப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீனா தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இந்த பள்ளத்தை தோண்டி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் சேய்ந்தி சுவாங்கே கிணறு பகுதியில் 10520 மீட்டர் ஆழத்திற்கு இந்த பள்ளம் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஏற்கனவே பெரிய பள்ளம் ஒன்றை சீனா தோண்டி வந்தது. அது பரிசோதனைக்காக தோண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பூமியின் ஆழத்தில் இருக்கும் சூழல் குறித்து தகவலை அறியும் நோக்கில் அது தோண்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் எரிவாயு வளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, எரிவாயுவுக்காக இந்த ஆழமான பள்ளங்கள் தோண்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு துறையில் தற்சார்பை ஏற்படுத்தும் வகையில் சீனா இந்த திட்டத்தில் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.