லடாக் எல்லைப் பகுதிகளில் சீன அரசு புதிதாக ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இன்றளவும் லடாக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து இங்கிலாந்தை சேர்ந்த ‘சாடம் ஹவுஸ்' என்ற ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அக்சாய் சின் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியை இணைக்கும் வகையில் ஜி695 என்ற பெயரில் சீன அரசு நெடுஞ்சாலையை அமைத்து வருகிறது. இதன்மூலம் சீன ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும்.
கடந்த 6 மாதங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தபோது அக்சாய் சின் பகுதியில் சீன ராணுவம் சார்பில் புதிதாக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது. புதிய கட்டிடங்கள், சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்சாய் சின் பகுதியில் உள்ள ஏரியில் புதிதாக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை நிறுத்தி வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.