ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேலும் 51 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க சீனா முன்வந்துள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் 50 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், மாநாட்டில் பேசும் போது, கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்திற்கு சீனா உதவுவதாக கூறினார். அப்போது 51 பில்லியன் டாலர் நிதியுதவி, உள்கட்டமைப்பு முயற்சிகளுக்கான ஆதரவு மற்றும் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் உறுதியளித்தார். அதோடு மேம்பட்ட மற்றும் பசுமையான தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், மூன்று மடங்கு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என்றார். மேலும், 360 பில்லியன் யுவான் (50.70 பில்லியன் டாலர்) நிதி உதவி, 210 பில்லியன் யுவான் கடன், மற்றும் 70 பில்லியன் யுவான் மதிப்பிலான புதிய முதலீடுகள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.