தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மலேசியா, புருநே, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்த கடல் பகுதியில் எல்லைகளை பகிர்ந்திருந்தாலும், சர்வதேச கடல் பகுதியில் சீனா முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த கடல் பகுதியில், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று நுழைந்ததாகவும், அதனை எச்சரித்து வெளியேற செய்ததாகவும் சீனா தெரிவித்துள்ளது.
USS Milius என்று பெயரிடப்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல், ஏவுகணைகளை அழிக்கும் திறன் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் கப்பல், பராசல் தீவுகளின் கடற் பகுதியில் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதி வியட்நாம் நாட்டாலும் சொந்தம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சீன கடல் பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அமெரிக்கப் போர்க்கப்பல் மீது குற்றம் சாட்டி, சீனா அதனை எச்சரித்து வெளியேற கூறியுள்ளது.
தென் சீன கடல் பகுதியில் ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதனை, சீனா ஏகாதிபத்தியமாக உரிமை கொண்டாடி வருவது அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது.