சீனாவின் முன்னாள் நீதி அமைச்சர் ஃபூ செங்குவா (Fu Zhenghua) மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. அதனையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து ஜிலின் மாகாணத்தின் சாங்சூன் (Changchun) மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக, சீனாவின் பெய்ஜிங் நகர பொதுப் பாதுகாப்பு துறையின் இணை அமைச்சராகவும், நீதித்துறை அமைச்சராகவும் ஃபூ செங்குவா பொறுப்பு வகித்தார். அவர் பதவியில் இருந்த போது, தனது பதவியைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக, பணம் மற்றும் பரிசுகள் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சுமார் 117 மில்லியன் யுவான் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை அவர் நேரடியாகவோ பினாமி மூலமாகவோ பெற்றுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டது. இதனால், உச்சபட்ச தண்டனையாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகார துஷ்பிரயோகத்திற்கு 2 ஆண்டுகள் தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.
சீனா, சமீப காலங்களில், ஊழல் செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகிறது. ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக இதனை சீனா செய்து வருகிறது. இதில் பல மூத்த நிதித்துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில், காய் ஏசங் (Cai Esheng) என்ற மூத்த அரசாங்க அதிகாரி ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டதால், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் பணி நிறைவு அடைந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் செய்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர், அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.