தைவான் மற்றும் சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. தைவான் பகுதியில் சீனா அத்துமீறி நுழைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தைவான் ஜலசந்தி பகுதியில், சீனாவின் பலூன் பறந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று பதிவிட்டுள்ள எக்ஸ் குறிப்பில், சீனாவின் 8 ராணுவ விமானங்கள் மற்றும் 3 கப்பல்கள் இன்று காலை தைவான் பகுதியில் நுழைந்தன. தைவான் பாதுகாப்பு அமைப்புகள் இதனை கண்டறிந்துள்ளன. இது தவிர, சீனாவின் ஒரு பலூன் செவ்வாய்க்கிழமை தைவான் ஜலசந்தி பகுதியில் கண்டறியப்பட்டது. கீலுங் பகுதியில் இருந்து 63 நாட்டிக்கல் மைல் வடகிழக்கில், சுமார் 12000 அடி உயரத்தில் இந்த பலூன் பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு நோக்கி பறந்த அந்த பலூன், அதன் பிறகு மறைந்து விட்டதாக கூறியுள்ளது.