வங்கதேசத்தில் உள்ள சீன நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கதேசத்திற்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்திலேயே, பலமுறை சீன நிறுவனங்களின் சட்டவிரோதச் செயல்கள் வெளிக்கொணரப் பட்டாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சீன நிறுவனங்கள் இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதனால், இரு நாடுகளின் ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆகியுள்ளது. அத்துடன், பன்னாட்டு நிதி நிறுவனமான உலக வங்கியும் சீனாவின் செயல்பாடுகளை கவனித்து, எச்சரித்து வருகிறது.
அண்மையில், Zong Sine Textile Industries Limited என்ற சீன நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னர் ஒன்றை வங்கதேச அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஜவுளித்துறை தொடர்பான பொருட்கள் இருக்க வேண்டிய கண்டெய்னரில் 900 அந்நிய சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. ஒருவேளை, இதனைப் பறிமுதல் செய்யாவிட்டால், வங்கதேசத்திற்கு 7 கோடி தாக்கா இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு, சிகரெட் கடத்தலில் சீன நிறுவனம் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, Tianye Outdoor என்ற சீன நிறுவனத்தின் வங்கதேசப் பிரிவு, 21 கோடியே 57 லட்சம் தாக்கா மதிப்பில் சிகரெட் கடத்தல் மூலமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமானது. மேலும், ஜனவரி மாதத்தில் மற்றொரு சீன நிறுவனம், சிகரெட் கடத்தலில் ஈடுபட்டு, 250 கோடி தாக்கா வரி ஏய்ப்பு செய்துள்ளது. அத்துடன், வங்கதேசத்தின் பாஸ்போர்ட்கள், பத்திரங்கள், அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக அச்சிட்டு வந்துள்ளது.
ஜூலை மாதத்தில், சுமார் 2700 கார்ட்டன் மதுபானங்கள் சிட்டகாங் - டாக்கா நெடுஞ்சாலையில் கையகப்படுத்தப்பட்டன. இதன் மதிப்பு 60 முதல் 70 கோடி தாக்காவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்றொரு முறை, சட்டவிரோத கடத்தல்கள் மூலமாக 19 சோடியம் சைக்ளமேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண சர்க்கரையை விட 30 முதல் 50 மடங்கு இனிப்பு சுவையுள்ள பொருளாகும். இதை உண்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. இவ்வாறான, கேடு விளைவிக்கும் செயல்களில் சீன நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், வங்கதேசம் இக்கட்டான நிலையில் உள்ளது.