மாலத்தீவில் முகாமிட்டு இருந்த சீனாவின் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது.
சீனாவின் சியான் யங் ஹாங் 03 என்ற உளவு கப்பல் மாலத்தீவை நோக்கி வந்தது. இந்த கப்பல் 4300 டன் எடை கொண்டது. இது ஆய்வு பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இந்திய பெருங்கடல் வழியாக இந்த சீன உளவு கப்பல் கடந்த 22 ஆம் தேதி மாலத்தீவுக்கு சென்றது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டது. எனவே பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை இந்த கப்பலை தீவிரமாக கண்காணித்தது. மாலத்தீவு தலைநகர் மாலேயில் இருந்து மேற்கே 7.5 கிலோ மீட்டர் தொலைவில் திலா பூஷி என்ற துறைமுகம் உள்ளது. இங்குதான் சீன உளவு கப்பல் நிலை நிறுத்தப்பட்டது. இதில் இந்த கப்பலில் உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. நுண்ணுயிர் மரபணு ஆய்வு, நீருக்கடியில் கனிம ஆய்வு, உப்புத்தன்மை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆய்வுகளில் இந்த கப்பல் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், மாலத்தீவு துறைமுகத்தில் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த உளவு கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் வந்துள்ளது. இந்த கப்பல் மாலத்தீவு துறைமுகத்திலிருந்து சென்ற போதிலும் கப்பலின் கடைசி சிக்னல் மாலத்தீவின் ஹுல்ஹுல் மாலே அருகே காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முயசு சீனாவுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.