சீனா, விண்வெளி ஆய்வு பணிகளுக்காக ஆளில்லா விண்கலம் ஒன்றை விண்ணிற்கு அனுப்பியிருந்தது. இந்த விண்கலம், 276 நாட்கள் பயணத்தை முடித்து, வெற்றிகரமாக இன்று பூமிக்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “விண்வெளி ஆய்வுப் பணிகளுக்கு, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை சீனா சோதனை செய்தது. அந்த சோதனை தற்போது வெற்றியடைந்துள்ளதால், விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது” என்று சீன ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விண்கலம் எதற்காக அனுப்பப்பட்டது, விண்வெளியில் என்ன ஆய்வு மேற்கொண்டது, எவ்வளவு தூரம் பயணித்தது, எங்கே பயணித்தது, போன்ற விவரங்களை சீனா வெளியிடவில்லை. மேலும், இந்த விண்கலத்தின் புகைப்படத்தையும் சீனா பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. இந்த விண்கலம், கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பப்பட்டதாக கிடைத்த ஒரே ஒரு தகவல் மட்டுமே அதிகாரப்பூர்வமானது ஆகும்.