எல்லையில் சீன அச்சுறுத்தல் நீடிக்கிறது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே குழுமம் சார்பில் டெல்லியில் கடந்த இரு நாட்களாக சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்திய, சீன உறவு சவாலான, அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், படைகள் வாபஸ் நடவடிக்கைகளுக்குப் பிறகும் நிலைமை சீராகவில்லை.
இந்திய ராணுவத்தின் கணிப்பின்படி, எல்லையில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக கீன் காங் பதவியேற்றிருக்கிறார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை அந்த நாடு முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.