மாலத்தீவு தனது துறைமுகத்தில் சீன ஆய்வு கப்பலை நிறுத்த அனுமதி அளித்துள்ளது.
மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றார். அவர் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். இந்நிலையில், மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது, அவற்றை இயக்குவது உள்ளிட்ட பணிகளில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வீரர்களை மார்ச் 15 திரும்ப பெறுமாறு அதிபர் மூயிஸ் அண்மையில் இந்திய அரசை வலியுறுத்தி வந்தார். இதனால் மாலத்தீவு இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் மாலத்தீவு சீன ஆய்வு கப்பலுக்கு தனது துறைமுகத்தில் நிற்க அனுமதி அளித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, சுழற்சி முறையில் பணியாளர்களை பணியமர்த்தவும், சரக்குகளை நிரப்பவும் சியாங் ஹாங் ஹோங் 3 என்ற சீன கப்பலை மாலத்தீவில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வுக் கப்பல் மாலத்தீவு கடற்பகுதியில் எந்த ஆய்விலும் ஈடுபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மாலத்தீவில் உள்ள மாலி துறைமுகத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி அந்த சீன கப்பல் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.