பிலிப்பைன்ஸ் போர்க்கப்பலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தி வருகிறது.
பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இரண்டாம் தாமஸ் ஷோல் எனும் கடற்கரை பகுதி உள்ளது. அந்த பகுதியில் ஸியர்ரா மேட்ரே எனும் இரண்டாம் உலக போர்கப்பலை பிலிப்பைன்ஸ் 1999-ல் நிறுத்தியது. பிற கப்பல்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு தளமாக அக்கப்பலை பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி வந்தது. அப்பகுதிக்கு அருகில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் எனும் கடற்பாறை பகுதியை 1995-ல் சீனா கைப்பற்றியதற்கு பதிலாக பிலிப்பைன்ஸ் அக்கப்பலை நிலைநிறுத்தியது.
தற்போது இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அக்கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் ஷோல் தங்களுக்கு சொந்தமான ரெனாய் ஜியாவ் பகுதி என்றும் பிலிப்பைன்ஸ் சட்டவிரோதமாக அக்கப்பலை நிறுத்தியிருப்பதாகவும் சீனா கண்டனம் தெரிவித்தது. அதனை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இக்கப்பலில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு சென்ற ஒரு சிறிய கப்பல் மீது நீர் பாய்ச்சும் இயந்திரங்களை கொண்டு நீரை பாய்ச்சி விரட்ட சீனா முயற்சித்ததாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் ஒருமுறை சீனா இக்கப்பலை அப்புறப்படுத்த வலியுறுத்தியது. இதற்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.