வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூபாய் 181.40 கோடி நிதி விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 3, 52,797 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்களில் 33 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பாதிக்கப்பட்டன. இதனை வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து மேற்பார்வையிட்டு அதன் பாதிப்பை உறுதி செய்தனர்.அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடம் பரிசீலனை செய்து 1,87,275 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூபாய் 181.40 கோடி ரூபாய் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியானது விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடங்கும் விதமாக மூன்று விவசாயிகளுக்கு நிவாரண நிதிக்கான ஆணைகளை முதலமைச்சர். மு க ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.