தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அளவில் அதிகமாக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 53% அளவுக்கு மேல் உயர்ந்துள்ளது. எனவே, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக வழங்குவதற்கு சவால் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், வேகமாக நகரமயமாகி வரும் பகுதிகளில் நகரங்களுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை நகரத்தோடு இணைந்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல்வேறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில், புதிதாக, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.














