சேலத்தில், ரூ.12.26 கோடியில் அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "ஆவின் நிறுவனம், 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம், தினமும் சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. இந்திய அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது"
"பால் உப பொருட்களான தயிர், மோர், லஸ்ஸி, வெண்ணெய், நெய், பனீர், பால்கோவா, யோகர்ட், பால் பவுடர், நறுமணப் பால் வகைகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்ஃபி, சாக்லேட், குக்கீஸ் வகைகளையும் நுகர்வோருக்கு ஆவின் நிறுவனம் விநியோகித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சேலம் பால் பண்ணை வளாகத்தில், தினசரி 6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறனுடன், ரூ.12.26 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்" என்று கூறப்பட்டுள்ளது.