செயற்கை மணல் எனப்படும் எம் சாண்ட் உற்பத்தியை ஒழுங்கு படுத்துவதற்கான புதிய கொள்கை இன்று வெளியிடப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இதனை வெளியிட்டார்.
தரமற்ற எம் சாண்ட் விற்பனையை கண்காணித்து தடை செய்ய இந்த கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, செயற்கை மணல் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், செயற்கை மணல் என்பது, குவாரி செயல்பாடுகளின் போது, பயன்பாட்டிற்கு உதவாத சிறிய அளவிலான கற்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், குவாரி கழிவுகள் இல்லாத நிலை உருவாகும் என்று சொல்லப்படுகிறது. அதை நோக்கியே இந்த கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செயற்கை மணல் உருவாக்கத்திற்காக, தனிப்பட்ட முறையில், குவாரி குத்தகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.