இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.
கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பொகோடாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தின விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்கிறது. எனவே அதனுடன் உள்ள தூதராக ரீதியிலான உறவை கொலம்பியா முறித்துக் கொள்கிறது. காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார். காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலை பெட்ரோ கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சமீபத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாசிகளுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தார். அதன் பிறகு இஸ்ரேல் கொலம்பியா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.