ஜனநாயக ரீதியிலான விவாதங்கள், ஆலோசனைகள் நிறைவு பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் - ஆகிய முப்பெரும் வாக்குறுதிகளை பாஜக அளித்திருந்தது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டி்ல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த 2020-ம் ஆண்டில் அங்கு பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இரு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து அமித் ஷா கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சாசனம் பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் மதரீதியாக சட்டங்கள் இருக்கக்கூடாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.