காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் நடைபயணம் செய்த பிறகு ராகுல் காந்தி கடந்த 10-ந்தேதி பஞ்சாப்பை சென்றடைந்தார். அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். இந்நிலையில் பஞ்சாப்பில் இன்று காலை ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் இறந்தார்.
ஜலந்தர் அருகே உள்ள பிலாப்பூர் பகுதியில் ராகுல் காந்தி இன்று காலை நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார்.
பாதயாத்திரையில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக சந்தோக்சிங் சவுத்ரி ஆம்புலன்சில் பக்வாரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் சிறிது நேரத்திலேயே இறந்தார். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.