சூடானில் இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா உள்பட 4 நாடுகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இந்நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.
சூடானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி அரசு வட்டாரங்கள் வெளியிட்ட செய்தியில், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய முக்கிய பங்கு வகிக்கும் 4 நாடுகளுடன் சேர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மந்திரிகளுடன், இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் தங்களால் இயன்ற நடைமுறை சாத்தியமுள்ள உதவிகளை செய்கிறோம் என உறுதியளித்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.